கட்டற்ற மென்பொருள் மாநாடு TOSS 2025| கட்டற்ற கலைதனை உலகறியச் செய்ய,அனைவரும் வருக!!!! | அழைப்பு மடல்

By | June 19, 2025

யாப்புக் கட்டுக்களுக்கு அப்பாற்பட்டு வளர்ந்ததே புதுக்கவிதை வடிவம். இத்தகைய சிறப்பு தனை பாரதி படைத்திட்டதால் தான், இன்று தமிழ் தனில் படைக்கப்படும் கவிதைகளில், வெகுஜன மக்களும் உணர்ந்து கொள்ளும் உயிரோட்டமும், கட்டற்ற சிந்தனை வளமும் கொட்டிக் கிடக்கிறது.

அது போல, உலகளாவிய அளவில் கட்டற்ற தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கட்டற்ற தொழில்நுட்பம் தன்னை தமிழில் கொண்டுவர வேண்டும் எனும் உயரிய நோக்கத்தோடு கணியம் போன்ற பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து செயலாற்றுகின்றன.

இதற்கு ஊக்கமளிக்கும் வகையில், கணியம் அறக்கட்டளை, பயிலகம், தமிழக மற்றும் இந்திய லினக்ஸ் பயனர்கள் குழு, பைத்தான் பயன்பாட்டாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கட்டற்ற மென்பொருள் மாநாட்டை சென்னையில் வைத்து நடத்துகின்றன.

மேற்படி சிறப்புமிக்க கட்டற்ற நிகழ்வானது, சென்னை செயின்ட் ஜோசப் தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து நடைபெற இருக்கிறது.

வருகிற ஜூலை மாதம் 18,19  ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வாசகர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி, நிகழ்விற்கு பதிவு செய்து கொள்ள முடியும். 

tossconf25.kaniyam.com/

மிகக் குறைந்த கட்டணத்தின் மூலம், நிறைந்த தொழில் நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள முடியும். மேலும்,  நிகழ்வில் ஸ்டால் அமைக்கும் ஆர்வலர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.

பல்வேறு துறைசார் வல்லுநர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், கட்டற்ற தொழில்நுட்ப ஆர்வலர்கள், தொழில்நுட்பம் தனை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

நீங்கள் கட்டற்ற தொழில்நுட்பம் தொடர்பாக இயங்கிக் கொண்டிருந்தாலும் சரி! அல்லது செயலாற்றும் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருந்தாலும் சரி! உங்களின் கனவுகளின் கதவுகளை திறக்க!, உலகில் கட்டற்ற தொழில்நுட்பம் செழிக்க! இன்றே மாநாட்டிற்கு தங்கள் வருகையை பதிவு செய்யுங்கள்.

தொழில்நுட்பம் தனை படைப்போம்! அதைக் கட்டற்ற வகையில் கொடுப்போம்!

இப்படிக்கு,

கணியம் அறக்கட்டளை.

கட்டுரையாளர்:

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளம் அறிவியல் எழுத்தாளர்,

நாகர்கோவில் – 02

மின்மடல் : srikaleeswarar@myyahoo.com