எழில் மொழி என்பது, தமிழிலேயே கணினியில் நிரலாக்கம் செய்ய உதவும் ஒரு நிரல் மொழி.
இது ஒரு கட்டற்ற மென்பொருள். மூல நிரலுடன், யாவருக்கும் பகிரும், மாற்றங்கள் செய்து வளர்த்தெடுக்கவும் உரிமையோடு தரப்படுகிறது.
அமெரிக்காவில் கணினி விஞ்ஞானியாகப் பணிபுரியும், திரு. முத்து அண்ணாமலை அவர்கள் 2012 ஆண்டுகளில், தமிழில் ஒரு நிரல் மொழியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டார். அதை ஒரு கட்டற்ற மென்பொருளாக வெளியிட்டார்.
அதைக்கண்ட பல கட்டற்ற மென்பொருள் நிரலாளர்கள், இணைந்து பங்களிக்கத் தொடங்கினர்.
எழில் மொழிக்குத் துணையாக ஒரு நிரலாக்கத் தொகுதி உள்ளது – open-tamil
இது தமிழ் எழுத்துக்களை பைதான் மொழியில் மிக எளிதாகக் கையாள உதவுகிறது.
வார்த்தைகளை எழுத்துகளாகப் பிரித்தல், உயிர்மெய் எழுத்துகளை, உயிர், மெய் எழுத்துகளாகப் பிரித்தல், உயிர், மெய் எழுத்துகளை இணைத்து, உயிர்மெய் எழுத்துகளாக மாற்றுதல் போன்ற மிக அடிப்படையான வசதிகளைத் தருகிறது open-tamil தொகுதி.
இதனால், பைதான் மொழியில் தமிழைக் கையாளுவது மிக எளிதாக உள்ளது. இதைக் கொண்டு பல்வேறு தமிழ், மொழியியல் சார்ந்த மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தனது சென்னை பயணத்தின் போது, இந்த இரு நிரல்களுக்கும் பங்களித்து வரும் பங்களிப்பாளர்களுக்கு ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தார் முத்து.
மார்ச் 24, 2018 அன்று மதியம் சந்திப்பு.
சென்னையில் இருந்து, சீனிவாசன், நித்யா, அபு, ஆஷிக், முத்து, இள. சுந்தரம்,அபிராமி, பெங்களூரில் இருந்து அருண்ராம், புவனேஷ் குமார், சுரேந்தர் ஆகியோர் கலந்து கொண்டோம்.
கலந்து கொண்டோர் அறிமுகம், கணினி நிறுவனங்களின் திறமூலப் பங்களிப்புகள், சிக்கல்கள், எழில் மொழியின் வரலாறு, எதிர் கொண்ட சிக்கல்கள், open-tamil தொகுதியின் பயன்பாடுகள், பிற நிரல் மொழிகளுக்கும் open-tamil ன் தேவைகள், தமிழுக்கான கட்டற்ற நிரலாக்கத்திற்கான தேவைகள், இனி செய்ய வேண்டிய செயல்கள், கட்டற்ற தமிழ்க்கணிமைக்கான ஒரு அமைப்பின் தேவைகள் ஆகியன பற்றி பேசினோம்.
சில நாட்களுக்கு முன் open-tamil ன் பயன்களை விளக்கும் வகையில் tamilpesu.us/ என்ற வலைத்தளம் வெளியிடப்பட்டது. அதில் நித்யாவின் சந்திப்பிழைத்திருத்தியை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு புது வசதிகளுடன் open-tamil ன் 0.7 ஆம் பதிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
pypi.python.org/pypi/Open-Tamil/0.7
சந்திப்பு முடிந்தவுடன், சென்னை பைதான் நிரலர் குழுவின் சந்திப்பில், முத்து, அருண்ராம் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இனிதான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்த முத்துவிற்கும், கலந்து கொண்ட அனைவருக்கும், பங்களிப்பாளர் அனைவருக்கும் நன்றிகள்.
படங்கள் இங்கே –
photos.app.goo.gl/AFlpDs67czWg9vsr1 – சீனிவாசன்
photos.app.goo.gl/SKgsAF68zrHpq7Wo2 – அருண்ராம்
– த.சீனிவாசன்