இந்தச் சிறிய கருவிகள் ஸ்டெம் செல்களுடன் இணைக்கப்பட்டு, மின்காந்த சமிக்ஞைகளுக்குப் பதிலளிக்கின்றன
குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், தண்டுவடக் காயம் என்பது சிகிச்சையளிப்பதற்கு மிகவும் கடினமான உடல் காயங்களில் ஒன்றாகவே உள்ளது. தழும்புகள் பெரும்பாலும் நரம்பு நார்களின் மறுவளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன, அதே சமயம் நரம்பு செல்கள் பொதுவாகத் தாங்களாகவே மீளுருவாக்கம் செய்ய முடியாது. இதற்கு ஒரு சாத்தியமான தீர்வு? நரம்பு செல்கள் மீளுருவாக்கம் செய்ய உதவக்கூடிய, ஸ்டெம் செல் உட்செலுத்தப்பட்ட, ஊசியின் மூலம் செலுத்தப்படும் நானோஎந்திரன்களின்(nanorobots ) ஒரு தொகுப்பு. இந்தச் சிறிய எந்திரன்கள் குறித்து, சமீபத்தில் ‘Nature Materials. ‘ எனும் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
தங்களின் புதிய கருவிகளை உருவாக்குவதற்காக, சுவிட்சர்லாந்தில் உள்ள ETH Zurich இல் உள்ள ஒரு குழு, உயிருள்ள நரம்பியல் முன்னோடி செல்களை (neural progenitor cells (NPCs) )—அதாவது தண்டுவடத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு ஸ்டெம் செல்கள்—தனிப்பயனாக்கப்பட்ட நானோ(nano) துகள்களுடன் இணைக்கும் நுண்ணிய இயந்திரங்களை வடிவமைத்துள்ளது. இந்தத் தனிப்பயனாக்கப்பட்ட நானோ(nano) துகள்கள் இரண்டு அடுக்குகளைக் கொண்டுள்ளன—ஒன்று காந்தப்புலங்களுக்கு உணர்திறன் கொண்டது, மற்றொன்று அவற்றை மின் சமிக்ஞைகளாக மாற்றுகிறது.
ஒவ்வொரு நானோஎந்திரனும்(nanorobot) சுமார் ஆறு மைக்ரோமீட்டர் அகலம் கொண்டது, இது அவற்றை ஒரு சிவப்பு இரத்த செல்லை விடச் சிறியதாக ஆக்குகிறது. இருப்பினும், ஒரு செயல்முறையை வெற்றிகரமாகச் செய்யத் தேவைப்படும் எந்திரன்களின்(robots ) எண்ணிக்கை மிக அதிகம். விலங்குகளில் நடத்தப்படும் சோதனைகளின் போது மில்லியன் கணக்கான நானோஎந்திரன்கள்(nanorobots ) தேவைப்படுகின்றன. இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், தொடக்கநிலையிலான சோதனை முடிவுகள் நம்பிக்கையூட்டுகின்றன. தண்டுவடம் துண்டிக்கப்பட்ட எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளில், மீச்சிறுஎந்திரன்களால்(micro robots ) தூண்டப்பட்ட நரம்பு செல்கள், 28 நாட்களுக்குள் காயம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் இணையத் தொடங்கின. சோதனையின் முடிவில், அந்த எலிகளின் இயக்கம், நடை, ஒருங்கிணைப்பு ஆராயும் நடத்தை ஆகியவற்றில் பெரும் முன்னேற்றங்களைக் காட்டின.
இந்த நானோஎந்திரன்கள்(nanorobots ) பரவலான பயன்பாட்டிற்குத் தயாராவதற்கு முன்பு, இன்னும் கணிசமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது, ஆனால் ஒருநாள் மனிதர்களிடமும் இதே போன்ற கருவிகளைச் சோதிக்கத் தொடங்குவோம் என்று இந்தக் குழு நம்புகிறது. அதற்கு முன்பு, மிகவும் பயனுள்ள காந்தப்புலங்கள் எவை என்பதையும், அவற்றை நோயாளிகளுக்கு எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அவர்கள் தீர்மானிக்க வேண்டும். இதற்கிடையில், உறுப்புகளிலும் காயங்களிலும் ஏற்படும் மீளுருவாக்கப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கவும் இந்த ஒட்டுமொத்த வடிவமைப்பைப் பயன்படுத்தலாம்.
“எங்களின் ‘lab-on-a-chip ‘ எனும் அமைப்பைப் பயன்படுத்தி மீச்சிறுஎந்திரன்களை(micro robots) மீண்டும் மீண்டும் உருவாக்கக்கூடிய, விரிவாக்கக்கூடிய வகையில் உற்பத்தி செய்வது, இந்தத் தளத்தின் பயன்பாட்டுத் திறன் அடிப்படை ஆராய்ச்சியைத் தாண்டியும் விரிவடைகிறது என்பதை நிரூபிக்கிறது,” என்று Pané i Vidal. என்பவர் மேலும் கூறினார்.